சென்னை, ஏப்ரல் 04:
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ம் தேதி நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நாள் நெருங்கி விட்டதால் முக்கிய தலைவர்கள் புதுவையை நோக்கி வந்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் தவெக தலைவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், புதுச்சேரி தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக புறப்பட்டார்.
இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவரின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது எனவும், பிரசாரத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மேல் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

