உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

ungaludhan stalin: 7.23 lakh petitions resolved

சென்னை, செப்டம்பர் 13:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் துறை வாரியாக பெற்ற மனுக்கள், அதன் மீதான தீர்வு நிலை மற்றும் நிலுவை விவரங்களை அலுவலர்களிடமிருந்து கேட்டறிந்தார். அதே சமயம், மனுக்களை உரிய கால கட்டத்தில் முடிக்க துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதுவரை அரசின் 15 துறைகளில் பட்டியலிடப்பட்ட 46 சேவைகளுக்கான 14,54,517 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் 7,23,482 மனுக்களுக்குத் தீர்வு கிடைத்துள்ளதாக அறிக்கை வழங்கப்பட்டது. தீர்வு பெற்ற மனுக்களில் 83 சதவீதம் (5,97,534) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின், தகுதியுள்ள அனைத்து மனுக்களும் விரைவாக தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்டு, வருவாய், கூட்டுறவு, ஆதிதிராவிடர் நலத்துறை, எரிசக்தி, ஊரக மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் மேல் கவனம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

மேலும், நகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி, குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை துறையில் விவசாயிகளின் இடுபொருட்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள் கோரிக்கைகளையும் முன்னிறுத்த வேண்டும் என்று கூறினார். ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் பட்டா தொடர்பான மனுக்களும் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான கள ஆய்வுகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். மக்கள் கருத்துக்களை கவனத்தில் கொண்டு, தெருவிளக்கு, இணைப்பு சாலை மற்றும் குடிநீர் போன்ற சமூக தேவைகளை முன்னுரிமையாகச் செய்ய அவர் அறிவுறுத்தினார்.

Related posts

அய்யா வைகுண்டரின் சமத்துவம் பேணுவோம்! – முதலமைச்சர் வாழ்த்து!

தஞ்சாவூரில் இன்று தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டம்!

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!