சென்னை, ஜூலை 5:
“உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறும். இத்திட்டதின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இவை நகர்ப்புறங்களில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் என மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்திற்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் கடைசி குடிமகனுக்கும் அரசின் சேவை, நலத்திட்டங்கள் நேரில் சென்று வழங்கப்பட வேண்டும் என்பதே “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.