சென்னை, ஏப்ரல் 07:
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 30-ந்தேதி பெரம்பூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அன்றைய தினம் தனது வேட்புமனுவையும் அவர் தாக்கல் செய்தார். தொடர்ந்து கொளத்தூர் தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்தார். போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு காரணங்களால் அவர் பிரசாரம் செய்த வில்லிவாக்கம் தொகுதிக்கான பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை தியாகராயநகரில் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இந்த திட்டமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஆயிரம் விளக்கு, தியாகராயநகர், சைதாப்பேட்டை தொகுதியில் பிரசாரம் செய்ய விஜய் தரப்பில் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரசாரத்துக்கு ஒரு மணி நேரம் மட்டுமே காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சைதாப்பேட்டையில் நாளை நடைபெற இருந்த பிரசாரத்தை த.வெ.க. ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. எங்கு அனுமதி முதலில் கிடைக்கிறதோ, அங்கு விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

