நியூயார்க், பிப்ரவரி 21:
அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக பதவியேற்ற டிரம்ப், அமெரிக்காவின் பொற்காலம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று கூறினார். அதற்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். கஜானாவில் நிதியை நிரப்பும் வகையில் சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டார்.
இதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளுக்கும் வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் கூறினார். சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ஐ பயன்படுத்தி அதிபர் டிரம்ப் இந்த வரி விதிப்புகளை அமல்படுத்தினார்.
எனினும், அரசியலமைப்பு விதிகளை டிரம்ப் மீறி விட்டார் என்றும் நாடாளுமன்ற அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என்றும் டிரம்ப்புக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் இறக்குமதி பொருட்களை சார்ந்துள்ள நிறுவனங்கள், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம் என தெரிவித்தன. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரிக்கப்பட்டது.
அதில், டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்தனர். இந்த சூழலில், 10 சதவீதம் உலகளாவிய வரி விதிப்பை அமல்படுத்தி டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா இந்த வரியை செலுத்த வேண்டி இருக்கும்.
இதுபற்றி வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. புதிய 10 சதவீதம் உலகளாவிய வரி விதிப்பானது, முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் கட்டணம் செலுத்தும் விவகாரங்களில் சமநிலையை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.
இதன்படி அனைத்து வர்த்தக கூட்டாளிகளும் இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு உட்பட வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்தியாவுக்கும் இந்த 10 சதவீத வரி விதிப்பு அமலில் இருக்கும் என கூறினார்.