சுற்றுலா மாநாடு: 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

Tourism Conference: CM made 3 important announcements!

செங்கல்பட்டு, பிப்ரவரி 02:

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் ரூ. 22,794 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 65,937 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சுற்றுலா இடங்களில் காட்சிமுனைகளை அமைக்கவும் ஏற்கனவே இருப்பவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆண்டுகளில் சுற்றுலா துறையை மேம்படுத்த ரூ. 612 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 3 முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறேன்.

  1. உலக சுற்றுலா வரைபடத்தில் கலை மற்றும் பண்பாட்டு சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு இடம்பெற அடுத்தாண்டு ஜனவரி மாதம் போட்டிகள் நடத்தப்படும்.
  2. மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் வழங்க, சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைத்து ரூ. 100 கோடியில் உலக தரத்திலான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.
  3. 2023 ஆண்டு அறிவிப்பின்படி, சிப்காட் நிறுவனம் சுற்றுலா நிறுவனங்களை கண்டறிந்து புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்க உள்ளது. முதற்கட்டமாக கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டங்களில் 4 சிறப்பு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முதலீடுகளை ஈர்க்க விருப்பப்பதிவு கோரிக்கைகள் அழைக்கப்பட்டுள்ளது. 2 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பார்க், தீம் பார்க் உள்ளிட்டவை இந்த இடங்களில் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டை நோக்கி இன்னும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வரவைக்க வேண்டும். அனைவரும் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். தமிழ்நாட்டை உங்களுடைய விருப்பமான இடமாக தேர்வு செய்துகொள்ளுங்கள். இயற்கை, வரலாறு, பண்பாட்டுடன் உங்களை நாங்கள் வரவேற்கிறோம். வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், திரும்பிச் செல்லும்போது மறக்க முடியாத நினைவுகள் மட்டுமின்றி அன்பு மிகுந்த சொந்தங்களுடன் திரும்பிச் செல்வீர்கள்” என்று பேசினார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!