சென்னை, மார்ச் 23:
தமிழ்நாட்டில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
சுமார் 3 முதல் 5 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதால், கார்களுக்கான கட்டணம் ரூ. 5 வரையும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 40 வரையும் உயர வாய்ப்புள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
சென்னை – கன்னியாகுமரி, திருச்சி – சேலம் மற்றும் சேலம் – கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 60 சுங்கச்சாவடிகள், 60 கி.மீ நீளமுள்ள வண்டலூர் – மிஞ்சூர் வெளிவட்டச் சாலையில் நான்கு, மதுரை வெளிவட்டச் சாலையில் இரண்டு, நாவலூர் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 8 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் ஆண்டு அட்டவணைப்படி செப்டம்பர் 1 ஆம் தேதி கட்டண உயர்வு மாற்றி அமைக்கப்படும்.
இதனிடையே, பெங்களூரு புறவழிச்சாலையில் மதுரவாயல் – வாலாஜாபேட்டை இடையே அமைந்துள்ள நேமிலி மற்றும் சென்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாததால், சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படாது. இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1, 2019 முதல் சுங்கக் கட்டணங்கள் மாற்றமின்றி உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கார்கள் மற்றும் ஜீப்களுக்கான சுங்கக் கட்டணம் ரூ. 5 உயரும். மேலும், பேருந்துகள் மற்றும் பிற கனரக வாகனங்களுக்கான கட்டணம், அவற்றின் வகையைப் பொறுத்து ரூ. 15 முதல் ரூ. 40 வரை அதிகரிக்கும்.
சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள சூரப்பட்டை, வானகரம், நல்லூர், பட்டரைபெரும்புதூர், பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

