டெல்லி, ஆகஸ்ட் 04:
நாடாளுமன்ற கூட்டத்தை தொடர்ந்து, டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ள மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து காலையில் நடைபயிற்சி எடுத்துச் சென்ற போது, ஹெல்மெட்டுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பிச்சென்றார். இந்த சம்பவத்தில் எம்.பி. சுதாவுக்கு லேசான காயமும் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை எம்.பி சுதா சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி நடவடிக்கை கோரியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உயர் பாதுகாப்பு மண்டலமாக கருதப்படும் பகுதியில் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருப்பது மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளைக் கிளப்பியுள்ளது.