மதுரை, டிசம்பர் 12:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தேவஸ்தானமே விளக்கேற்ற வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி? என்றும் அரசு தரப்பு வாதங்களை முன் வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் விளக்கேற்றுவது தொடர்பான வழக்கு இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கோயில் தேவஸ்தானமே விளக்கேற்ற வேண்டும், தனி நபர் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு தெரிவித்தது.
மேலும், மனுதாரர் தாக்கல் செய்யும் விஷயங்களை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள இயலாது. இந்து சமய விதிக்கு உட்பட்டு அனுமதி பெற்றுத்தான் செயல்படுத்த வேண்டியிருக்கிறது. விளக்கேற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட இந்த இடம் தர்கா, நெல்லித்தோப்பு பகுதியில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால் உள்ளது.
3 நாள்களுக்கு முன்பாக, தனி நீதிபதி உத்தரவிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தச் சொன்னால் எப்படி? தீபமேற்றும் இடத்தை மாற்றுவது குறித்து கோயில் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டுமென ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பில் வலியுறுத்தியிருக்கிறது.
மேலும், மனுதாரர் கோரிக்கை அதிகாரிகளை கட்டளையிடும் வகையில் உள்ளது. சட்ட அடிப்படையில் அது உரிமையில்லை. வழக்கில் மனுதாரருக்கு சட்ட உரிமையில்லை. கோயில் நிர்வாகத்துக்கே உரிமை உள்ளது. மனுதாரர் தொடர்ந்த வழக்கில் தர்கா தரப்பை சேர்க்காததால் நீதிமன்றம் எதிர்மனுதாரராக சேர்த்தது.