சென்னை, டிசம்பர் 06:
தமிழ்நாடு அயோத்திபோல மாறுவதில் தவறில்லை என சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதியின் குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அயோத்தி இந்தியாவில்தானே இருக்கிறது. அயோத்தி ஒன்னும் இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லையே… இந்தியாவில்தான் உள்ளது.
தமிழ்நாடு அயோத்தி போல மாறுவதில் தவறில்லை. ராமர் ஆட்சி பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி ராமர் ஆட்சிபோல வர வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் அருகில் உள்ள இஸ்லாமியர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தர்கா அருகே செல்லவில்லை. தீபத்தூணில் மட்டும்தான் தீபம் ஏற்றுகிறோம். தீபம் ஏற்றுவதில் எந்த மதக் கலவரமும் ஏற்பட முகாந்திரம் இல்லை.
சனாதன தர்மத்தை அழித்துவிடுவோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி சொல்லியிருக்கிறார். அவருடைய கனவு பலிக்காது. எத்தனை யுகங்கள் ஆனாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் தமிழக அரசு பொய் சொல்கிறது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் அதுகுறித்து திமுக அரசு பேசட்டும். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்.
மேலும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு பாஜகதான் முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்றார்.