சென்னை, ஜூலை 11:
தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் இதுவரை எந்தவித ‘நிபா’ வைரஸ் நோய் தாக்கமும் பதிவாகவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சமீபத்தில் ‘நிபா’ வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நோய் பரவல் நிலையை தீவிரமாக கண்காணித்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.பொது மக்கள் பதற்றமின்றி, விழிப்புடன் இருந்து அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், நிபா வைரஸ் என்பது விலங்கியல் மூலம் பரவும் நோய் தொற்றாகும். பழ வகை வவ்வால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வவ்வாலின் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை உண்ணுதல் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.குறிப்பாக, கேரளா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு, கேரளாவை சுற்றியுள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதால், ‘நிபா’ வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.