1-ந்தேதி முதல் 65 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு

The speed of 65 express trains will be increased from the jan.1

சென்னை, டிசம்பர் 30:

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரயில்வேக்கான புதிய கால அட்டவணை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதில் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய பயணிகள் ரயில், ரயில் சேவை நீட்டிப்பு, புதிய நிறுத்தங்கள், ரயிலின் வேகம் அதிகரிப்பு, கூடுதல் பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் அடங்கிய புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, நடப்பாண்டில் 8 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 ரயில்கள் மாற்று நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 44 எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 102 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. 22 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 வந்தே பாரத் ரயில்களில் கூடுதாலாக 40 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. 46 எக்ஸ்பிரஸ் ரயில், 27 பயணிகள் ரயில்களில் 62 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், 14 பயணிகள் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி, 5 நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் சேமிக்க முடியும்.

குறிப்பாக, செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ர யில் (12662) வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127) 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16102) 85 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும், கோவை-ராமேசுவரம் ரயில் (16618) 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (20692) 45 நிமிடம் முன்னதாகவும், தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (12694) முத்துநகர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் முன்னதாகவும் சென்றடையும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதேபோல, நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயில் 35 நிமிடம் முன்னதாகவும், மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில் 15 நிமிடம் முன்னதாகவும் செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் பயண நேரம் சேமிக்க முடியும்.

திருப்பதி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 2-ந்தேதி முதல் போலூர் வரையிலும், ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1-ந்தேதி முதல் போலூர் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதியா ரயில், நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் வரை விரிவாக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை