சென்னை,நவம்பர் 12:
பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருநை நாகரிகத்தின் அடித்தளமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களிலும், நம்பியாற்றங்கரையில் துலுக்கர்பட்டியிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை பேணி காக்கும் வகையில், திருநெல்வேலியில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் எழிலார்ந்த ‘பொருநை’ அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானம் மற்றும் காட்சிப்படுத்தல் பணிகளை நேற்று துறைசார் அதிகாரிகளுடன் பார்வையிட்டேன். விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்படவுள்ள இந்த அருங்காட்சியகம் தமிழ் பெருங்குடி மக்களின் வரலாற்று பெருமையையும், பண்பாட்டு செழிப்பையும் உலகறிய ஒலிக்கும் குரலாக அமையும் என பதிவிட்டுள்ளார்
பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படவுள்ள இந்த உலக தரம் வாய்ந்த பொருநை அருங்காட்சியகம், தமிழ்நாட்டின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும் மாபெரும் சான்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.