சென்னை, ஜூலை 11:
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” என்னும் நூலை வெளியிட்டு உள்ளார். இந்நூல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் கூட்டு வெளியீடாக தயாரிக்கப்பட்டது.
இந்நூல் எளிதில் வாசிக்கத் தகுந்த வடிவில், தமிழண்ணல் எழுதிய நுண்பொருள் விளக்கவுரை, பி.எஸ்.சுந்தரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் ஓவியர் மணியம் செல்வத்தின் ஓவியங்கள் இணைந்த இருமொழிப் பதிப்பாக உள்ளது.திருக்குறளைப் பயில விரும்பும் வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள், மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், திண்டுக்கல் ஐ. லியோனி, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மா.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்