நெல்லை, ஆகஸ்ட் 1:
தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில், பெண்ணின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, இந்த கொலையில் சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக கவினின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்த காரணத்தால், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மேலும், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பிறகு, சுர்ஜித்தின் தந்தை சரவணன் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனும், நீதிகேட்டும் கவினின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அரசு தரப்பில் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்ட தன்மையில், 5 நாட்களுக்கு பிறகு கவினின் உடலைப் பெற அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, கவின் உடல் இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று தகனம் செய்யப்பட உள்ளது.