சென்னை, ஜனவரி 26:
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா தேநீர் விருந்தில் கலந்துகொள்ள ஆளுநரிடம் இருந்து அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, ஆளுநர் அளிக்கும் விருந்தில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை கண்டித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காங்கிரஸ், விசிக, இடதுசாரி, மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.