டெல்லி, அக்டோபர் 27:
டெல்லி மற்றும் தேசிய தலைநகரின் முக்கிய வலயங்களில் தெருநாய்கள் தொல்லை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கான விசாரணையில் தனித்தனியாக நான்கு மனுவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடா்பாக கடந்த ஆக.22-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், டெல்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய பகுதியில் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திய பின்னா், பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் அவற்றை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்தது.
அப்போது இந்த விவகாரம் தொடா்பாக நாடு முழுவதும் உயா்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்த 3 நீதிபதிகள் அமா்வு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வழக்கில் ஒரு தரப்பாகச் சோ்த்தது. அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன.
இதனால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களும் வருகின்ற நவ. 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.