சென்னை, ஜூலை 31:
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஊடக, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கும் காவல்துறைக்கு தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்!
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ளே ஒரு இடம் ஒதுக்கீடு செய்து அங்கே வரும் புகார்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாய் அவர்களிடம் செய்திகளை சேகரித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை அலுவலகங்களுக்கு ஜனநாயக ரீதியாக பகிர்வது வழக்கமாக இருந்தது.
ஆனால் தற்போது சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கம் போல் பேட்டி எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஸ்டாண்டை நீக்கியதும், பேட்டி எடுக்க தடை என கூறி வருவது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் மன வருத்தத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. “இங்கே புகார் அளிப்பவர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீது அவதூறாக பேசியதாகவும், இது அரசுக்கு சொந்தமான கட்டிடம் இங்கு அரசுக்கு எதிராக பேசக்கூடாது. அதனால், பேட்டி எடுக்க தடை என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதால் மைக் ஸ்டேண்ட் அனைத்தையும் எடுத்துவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதில் இருந்து மேலிடத்திலிருந்து பேட்டி எடுக்கும் இடத்தில் உள்ள ஸ்டாண்டை நீக்க உத்தரவிட்டதாக தெரிகிறது. பொதுமக்களின் புகார்களை ஜனநாயக ரீதியிலான முறையில் செய்தியாக கொடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது தெரிகிறது.
இது பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தையும் அவர்களது உரிமை மீதும் அழுத்தத்தை கொடுத்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒரு முயற்சியாக தான் கருதப்படுகிறது. ஜனநாயக ரீதியாக பத்திரிக்கையாளர்கள் வரும் செய்திகளை மக்களிடம் எடுத்துக் செல்வது அவர்களது ஜனநாயக கடமை ஆகும்.
அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்காக அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையை தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.