சென்னை, நவம்பர் 27:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதன்பின் சென்னை பட்டினம்பாக்கத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் இன்று சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். மேலும் திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் கட்சியில் சேர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக, மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சத்யபாமா ஆகியோரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். 1977 முதல் 8 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமைகளின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த செங்கோட்டையன், அதிமுக பிரிவினைக்குப் பின் நீக்கப்பட்டார்.
தவெகவில் இணைந்ததன் பின் அவரது முதல் செயல்பாடாக மூன்று மாமேதைகளிடம் மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.