சென்னை, செப்டம்பர் 11:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் காலமானார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதமூர்த்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் எனது மருமகன் சபரீசன் அவர்களின் தந்தையார் வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் திரு. சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் முதல்வர் ஸ்டாலின் தொடர்பான நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் நடைபெற இருந்தது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில், நாளைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுள்ளது.