சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 18 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இந்நிலையில் பாமக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டார்.
பாமக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:
- அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
- உடனடியாக தமிழ்நாடு முழுவதும் 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
- மருத்துவம், மின்வாரியம் உட்பட அரசு, தனியார் துறை மூலமாக மொத்தம் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
- பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும்.
- போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசு.
- பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்ற குறுகிய கால, மத்திய கால பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும்.
- சென்னையில் பிரம்மாண்டமாக தமிழிசை அரங்கம் அமைக்கப்பட்டு தமிழிசை விழா நடத்தப்படும்.
- இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும்.
- அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் புத்தகப்பை இல்லாத கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

