சென்னை, அக்டோபர் 22:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று காலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பின்னர் காலை 8.30 மணியளவில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதே பகுதியில் நிலைபெற்றது.
இந்த மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியம் வரை தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது வடதமிழக–புதுவை–தெற்கு ஆந்திரக் கடலோர பகுதிகளுக்குப் பெரும் மழை மண்டலமாக மாறக்கூடும் என கணிக்கப்படுகிறது.
அத்துடன், (அக்.20) முதல் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் தற்போது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.
மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
22-10-2025: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கன முதல் மிக கனமழைக்கு, ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தீவிரம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால், மக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாது இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.