ஹரியானா, அக்டோபர் 14:
ஹரியானாவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் அக்டோபர் 7-ந்தேதி துப்பாக்கியால் தற்கொலை செய்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை பூரன் குமாரின் இல்லத்தை அடைந்த ராகுல் காந்தி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பூரண் குமாரின் தற்கொலை தொடர்பாக ஹரியாணா அரசு மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ராகுல் காந்தியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பூரண் குமார் 2001 ஆம் ஆண்டு முதல் இந்தியக் காவல் பணியில் (ஐபிஎஸ்) அதிகாரியாக உள்ளார்.பூரண் குமார் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் எட்டு பக்க இறுதிக் குறிப்பில், 52 வயதான ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜர்னியா உள்பட எட்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சாதி அடிப்படையிலான பாகுபாடு, மனரீதியான துன்புறுத்தல், பொது அவமானம் மற்றும் அட்டூழியங்கள் போன்ற குற்றங்களை அவர் சாட்டியுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி மூத்த ஐஏஎஸ் அதிகாரி அம்னீத் தனது கணவரின் தற்கொலைக்குத் தூண்டிய கபூர் மற்றும் பிஜர்னியாவின் பெயரை எஃப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும் அவர்களைக் கைது செய்யக் கோரும் அதிகாரியின் குடும்பத்தினர், தங்கள் கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை பிரேதப் பரிசோதனை, உடல் தகனம் செய்ய ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர். ஐபிஎஸ் அதிகாரியின் மரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் சண்டீகரில் உள்ள பூரன் குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.