அரியலூர், ஜூலை 12:
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகம் வருகை தருகிறார். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது அவர் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பெருவுடையார் கோவில், மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை நாளை தமிழக அரசு 2023-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.இந்த ஆண்டு, மத்திய கலாசாரத் துறை சார்பில் 5 நாட்கள் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விழா தொடக்க நிகழ்ச்சியை வருகிற 23-ந்தேதி மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைக்கிறார், நிறைவு நாளான 27-ம் தேதி பிரதமர் மோடி திருவாசகம் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அன்றைய தினம் பிரதமர் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவில் வடிவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.