சென்னை, ஜனவரி 14:
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்று வரும் நிலையில் இன்று(ஜன. 14) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றனர்.
பொங்கல் வைத்து கொண்டாடிய நிலையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அனைவருக்கும் பொங்கல் வழங்கினர். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.