விழுப்புரம் , ஜூலை 5:
பட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் குழப்ப நிலைக்கு தீர்வு காண, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் இணைந்து பேச வேண்டும் என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “பாமகவில் இருக்கும் அனைவரும் தற்போது குழப்பத்திலும் வேதனையிலும் உள்ளனர். ராமதாஸ் மற்றும் அன்புமணி இணைந்து செயல்படாவிட்டால், கட்சி நலிவடையும்,” என தெரிவித்தார்.
மேலும் “இருவரும் ஒன்றாக இணைந்து பேசுவதே பிரச்சினைக்கு தீர்வு. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால், கட்சியில் கொறடா குறித்து தற்போது பிரச்சினை இல்லை. பாமகவில் உள்ள பிரச்சினைகளுக்கு எந்த வெளி கட்சியும் காரணம் இல்லை. பொறுப்புகளை நீக்குவதும் நியமிப்பதும் மாறி மாறி நடைபெறுவதால் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.