டெல்லி, டிசம்பர் 04:
பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே உள்ள கடுமையான மோதல் காரணமாக, “கட்சி யாருடையது?” என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதில் ராமதாஸ் தரப்பு, அன்புமணி கட்சியை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்ததாக கூறி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
“ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர்; சுமார் ஒரு கோடி உறுப்பினர்கள் அவரது கீழேயிருக்கின்றனர். அன்புமணி தரப்பின் தாக்கல் செய்த ஆவணங்கள் மோசடியானவை. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளது” என ராமதாஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு எதிராக, அன்புமணி தரப்பினர் பாமகவின் தலைவர் தமக்கு என அங்கீகாரம் வழங்கப்பட்டதை வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட பதிலில், “எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தலைவராக தெரிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அதனை முன்வைத்து நிலையை விளக்கலாம். கட்சியின் தலைமை விவகாரத்தில் நாங்கள் தனிப்பட்ட முடிவு எடுக்கமாட்டோம். இது உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட வேண்டும். இரு தரப்புகளின் மோதல்கள் தொடர்ந்தால், கட்சியின் சின்னம் யாருக்கும் வழங்கப்படாமல் முடக்கப்படும்” என தெரிவித்துள்ளது.