புதுச்சேரி, ஏப்ரல் 01:
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. பிரசாரத்துக்கு இன்னும் 6 நாள்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் மொத்தம் 28 தொகுதிகள் தமிழக வெற்றிக் கழகமும், 2 இடங்களில் அதன் கூட்டணிக் கட்சியும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள 23 இடங்களில் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், 19 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே பிரசாரத்துக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, அனுமதி அளிக்கப்பட்ட 4 இடங்களிலும் 2 மணி நேரத்துக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு, ஒரே ஒருமுறை தான் புதுச்சேரியில் விஜய் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அதுவும், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக என்பது குறிப்பிடத்தக்கது.

