டெல்லி, டிசம்பர் 19:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை நிறைவடைந்தது.
இரு அவைகளிலும் நிறைவில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு, தேதி குறிப்பிடாமல் கூட்டத்தொடரை ஒத்திவைத்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1-ம் தேதி இரு அவைகளிலும் தொடங்கின. இந்த தொடரில், தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டன.
மேலும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து, வாக்காளர் தீவிரத் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டன.
இதுதொடர்பான விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
மேலும், எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ (விபி – ஜி ராம் ஜி) சட்ட மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விரைவில் சட்டங்களாகவுள்ளன. மேலும் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக அடுத்தாண்டு ஜன. 31-ம் தேதி நாடாளுமன்றம் கூடும்.