“போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

Paddy procurement should be done on a wartime basis - EPS

திருவாரூர், அக்டோபர் 22:

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பல நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் சென்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அரசு நெல் கொள்முதல் பணிகளை நடத்தும் விதம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “நெல் கொள்முதல் பணிகள் கடந்த 20 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் மழை காரணமாக நெல் முளைத்து விவசாயிகள் பெரிய நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இன்று காலை முதல் பல இடங்களில் விவசாயிகளைச் சந்தித்தேன்; அவர்கள் உண்மையிலேயே துன்பத்திலும் கோபத்திலும் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட நெல் முளைத்து சேதமடைந்துள்ளது. 5 ஆயிரம் மூட்டைகள் குடோனில் உள்ளன, ஆனால் 4 ஆயிரம் மூட்டைகள் சாலையோரத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை,” என்றார்.

அதேபோல், திருவாரூர் மாவட்டம் படூர் கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரம் மூட்டைகள் நெல் சேகரிக்கப்பட்டிருந்தது. அதில் 7,500 மூட்டைகள் இன்னும் எடை போட்டு கொள்முதல் செய்யப்படாத நிலையில், மழையில் நனைந்து வீணாகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“ஒரு நாளுக்கு வெறும் 900 மூட்டைகள் மட்டுமே எடை போட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. இது மிகவும் மந்தமான செயலாகும். 10 நாட்களாகவே எந்த செயலும் நடக்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், முன்பு கொள்முதல் செய்த நெல்லை லாரிகளில் அனுப்பிய பிறகே புதிய நெல்லை கொள்முதல் செய்ய முடியும் என்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என அவர் கூறினார்.

“அதிமுக ஆட்சியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் ஒவ்வொரு மையத்திலும் எடையிடப்பட்டன. ஆனால் தற்போது அரசு கூறும் எண்ணிக்கைகள் போலி தகவல்கள். உண்மையில் தளத்திலுள்ள நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்து பயிரிட்ட நெல் இன்று மழையில் முளைத்து அழிகிறது. இதற்குப் பொறுப்பு திமுக அரசின்தான்,” என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதேவேளை, “மத்திய அரசின் அனுமதி இன்றி நெல் கொள்முதல் தாமதமாகியுள்ளது” என கூறும் அரசை அவர் விமர்சித்தார். “மத்திய அரசு ஆகஸ்ட் 18ஆம் தேதி அனுமதி வழங்கி விட்டது, ஆனால் அதையும் தங்கள் அமைச்சர்களுக்குத் தெரியாது என்பது ஆட்சியின் திறனின்மையைக் காட்டுகிறது,” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நெல் கொள்முதல் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள அரசு உடனடியாக அவசர முடிவெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!