சென்னை, அக்டோபர் 21:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மழையால் ஏற்படக்கூடிய அவசர நிலைகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளின் கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் மழை நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதனுடன், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட புதிய எச்சரிப்பின் படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர்ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அந்த மாவட்டங்களின் நிர்வாகங்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனிப்பட்ட மூத்த கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக தத்தமது மாவட்டங்களில் சென்று நிலைமையை மதிப்பாய்வு செய்து, தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவசர தேவைகளில் மக்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் அவர்கள் பொறுப்பேற்ற மாவட்டங்களின் விவரங்கள் மாநில அரசின் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
மழை தீவிரம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், அரசுத் துறைகள் அனைத்தும் முழு எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அரசு வெளியிட்ட அதிகாரிகள்–மாவட்ட விவரப் பட்டியல்:
- திருவள்ளுர் மரு.கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், எல்காட் நிறுவனம், சென்னை
- காஞ்சிபுரம் கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தாட்கோ, சென்னை
- செங்கல்பட்டு கிரந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை
- விழுப்புரம் எஸ்.ஏ. ராமன், இ.ஆப., இயக்குநர், தொழிலாளர் நலன், சென்னை
- கடலூர் டி. மோகன், இ.ஆ.ப., இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிமவளம், சென்னை
- மயிலாடுதுறை கவிதா ராமு, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், கோ ஆப்டெக்ஸ், சென்னை
- திருவாரூர் டி. ஆனந்த், இ.ஆ.ப., ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை
- நாகப்பட்டினம் ஏ. அண்ணாதுரை, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை
- தஞ்சாவூர் எச். கிருஷ்ணனுன்னி, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், சென்னை
- கள்ளக்குறிச்சி பி. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப., செயலாளர், மாநில தேர்தல் ஆணையம், சென்னை.
- அரியலூர் எம். விஜயலட்சுமி, இ.ஆப., ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை
- பெரம்பலூர் எம். லட்சுமி, இ.ஆ.ப., ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை
என 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில், 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சி பணி மண்டல அதிகாரிகள் தத்தமது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.