சென்னை, ஜூலை 7:
நாடு முழுவதும் ஜூலை 9-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தமிழ்நாடு மாநில தொழிலாளர் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9-ம் தேதி நடைபெறவுள்ள இந்த வேலைநிறுத்தம், தமிழகம் முழுவதும் பொது வாழ்க்கையைப் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரசுப் போக்குவரத்து சேவைகள், வங்கிப் பணிகள், அரசு அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப தங்கள் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தொழிற்சங்கங்களின் இந்த கூட்டுப் போராட்டம், தங்களது நீண்டகால கோரிக்கைகளை அரசு கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
தொழிற்சங்கள் முன்வைத்துள்ள 17 அம்சக் கோரிக்கைகளில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள், ஊதிய உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் நிறுத்தல் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டங்கள் தீவிரமாக தொடரும் என தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.