கோபி, செப்டம்பர் 03:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மீண்டும் பரபரப்பாக பரவி வருகிறது. கட்சியில் தன்னை போதுமான முக்கியத்துவமில்லாமல் நடத்தப்படுவதாக செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் செங்கோட்டையன், வரும் செப்டம்பர் 5-ந் தேதி கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதன் பின்னணி கொடுத்து அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பண்ணாரி, 16 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் 13 பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், செப்டம்பர் 5-ந் தேதியில் கட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப்போகிறேன் என்றும், அன்றைய தினம் மனம் திறந்து விளக்கமாக பேசுவேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், “என்னுடைய கருத்து தொண்டர்களின் கருத்தாக பிரதிபலிக்கப் போகிறது” என்றும் செங்கோட்டையன் கூறினார். அப்போதைய தினத்தில் எந்த ஒரு நிர்வாகியையும் சந்திக்கவில்லை என்றும், தொண்டர் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றும் தெளிவுபடுத்தினார்.
அடுத்த நாள் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 10,000 பேர் கூடுவதாக தகவல் வந்துள்ளதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், “5-ந்தேதி அது உங்களுக்கே தெரியும். நான் யாரையும் அழைக்கவில்லை; அவர்கள் தங்களாகவே வந்தனர்” என்று பதிலளித்தார். இதற்கிடையே இன்று செங்கோட்டையனின் தோட்ட வீட்டிற்கு முன்னாள் எம்.பி. சத்திய பாமா வந்து சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். செங்கோட்டையன் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் சத்திய பாமா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.