சென்னை, ஜனவரி 29:
13,080 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கைத்தறி, துணிநூல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு, ”தமிழ்நாடு துணை முதலமைச்சர் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (29.1.2026) கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசுத் தொகை காசோலைகளையும், தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையின்கீழ், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம், வட்டி மானியம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா நிறுவனத்திற்கு மாநில அரசின் பங்குத் தொகை வழங்குவதற்கான அரசின் ஆணைகளை வழங்கினார்.
மேலும், கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360ல் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகள் (Best Exporters Award) வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய ஜவுளி ஏற்றுமதியாளர்களை சிறப்பிக்கும் வகையில் சிறு, குறு, நடுத்தர, பெரிய மற்றும் மிகப் பெரிய ஏற்றுமதியாளர்கள் என்ற 5 பிரிவுகளில் முதலிடம் பெற்ற 5 நிறுவனங்களுக்கு தலா 2.00 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை காசோலையுடன் பாராட்டுச் சான்றிதழ்களையும், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்ற 10 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019ல் அறிவிக்கப்பட்டுள்ளபடி, 15 ஆண்டுகால பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்த பெறும் வங்கி கடனுக்கு செலுத்தப்படும் வட்டிச் சுமையினை குறைக்க (7 ஆண்டுகளுக்கு) 2% வட்டி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு நூற்பாலைக்கு 11.70 இலட்சம் ரூபாய் வட்டி மானியம் வழங்க அரசின் ஆணையினை வழங்கினார்.
மேலும் விசைத்தறிகள் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத தானியங்கி ரேப்பியர் தறிகளாக நவீனப்படுத்த (50% மானியம் – தறி ஒன்றுக்கு அதிகபட்சம் 1.00 இலட்சம் ரூபாய்) மற்றும் புதிய நாடா இல்லாத தானியங்கி ரேப்பியர் தறி கொள்முதல் செய்ய மூலதன முதலீட்டு மானியம் (20% மானியம் – தறி ஒன்றுக்கு அதிகபட்சம் 1.50 இலட்சம் ரூபாய்) வழங்கும் திட்டத்தின் கீழ் 12 விசைத்தறியாளர்களுக்கு மானியமாக மொத்தம் 67.49 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, துணி நூல் பதனிடும் பிரிவுக்கான மூலதன முதலீட்டு மானியம் (25% மானியம் – புதிதாக நிறுவனம் துவக்க அதிகபட்சம் 5.00 கோடி ரூபாய், பழைய நிறுவனத்தை விரிவுபடுத்த/ நவீனப்படுத்த 4.00 கோடி ரூபாய்) வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய பதனிடும் ஆலை துவக்கவும் ஏற்கனவே இயங்கிவரும் பதனிடும் ஆலைகளை விரிவுபடுத்தவும் திட்ட பிரேரணை சமர்ப்பித்த 3 நிறுவனங்களுக்கு மூலதன முதலீட்டு மானியமாக 10.92 கோடி ரூபாய் வழங்குவதற்கான அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் ஆணையினை வழங்கினார்.
தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019ல் அறிவிக்கப்பட்டுள்ளபடி, அகலமான துணி அச்சிடும் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 10% மூலதன முதலீட்டு மானியம் (1 நிறுவனத்திற்கு அதிகபட்சம் 20.00 இலட்சம் ரூபாய்) வழங்கும் திட்டத்தின் கீழ் அகலமான துணி அச்சிடும் இயந்திரங்கள் கொள்முதல் 2 செய்த நிறுவனங்களுக்கு மூலதன முதலீட்டு மானியமாக 38.35 இலட்சம் ரூபாய் மானியம் வழங்க அரசின் ஆணையினை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வீட்டு உபயோக ஜவுளிப் பிரிவு மற்றும் ஆயத்த ஆடை பிரிவுகளுக்கென கணினி மென்பொருளுடன் கூடிய தானியங்கி துணி வெட்டும் இயந்திரம் கொள்முதல் செய்ய 50% முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் (1 நிறுவனத்திற்கு அதிகபட்சம் 50.00 இலட்சம் ரூபாய்) கீழ் தானியங்கி துணி வெட்டும் இயந்திரம் கொள்முதல் செய்த 3 நிறுவனங்களுக்கு மூலதன முதலீட்டு மானியமாக 142.94 இலட்சம் ரூபாய் வழங்க அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் ஆணையினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.
ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் மாநில அரசின் பங்காக மானியம் (திட்ட மதிப்பில் 9% அதிகபட்சம் 9.00 கோடி ரூபாய்) வழங்கும் திட்டத்தின் கீழ், பல்லவாடா தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா நிறுவனத்திற்கு மாநில அரசின் பங்குத் தொகையாக 1.30 கோடி ரூபாய் மானியம் வழங்க அரசின் ஆணையினை வழங்கினார்.
தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழைகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டங்களுக்கு கல்வி நிறுவனங்கள்/ஆராய்ச்சி மையங்களுக்கு நிதியுதவி அளிக்கும் (திட்ட மதிப்பில் 50% அதிகபட்சம் 1.00 கோடி ரூபாய்) திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்வி நிறுவனங்கள்/ஆராய்ச்சி மையங்கள் மேற்கொள்ளவுள்ள 6 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மானியமாக 138.32 இலட்சம் ரூபாய் வழங்க அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் ஆணையினை வழங்கினார்.
கார்ல் மையர் (Karl Mayer) நிறுவனம் வார்ப் நிட்டிங் (Warp Knitting), நெசவு தயாரிப்பு (Weaving Preparatory) மற்றும் தொழில்நுட்ப ஜவுளி (Technical Textile) உற்பத்தி இயந்திரங்கள் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
இந்த மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், சந்தைப் போக்குகள் (Global Trends), மேம்பட்ட தொழில்நுட்பங்கள் (Advacned Technologies), தரத் தரநிலைகள் (Quality Control) மற்றும் நவீன செயல்பாட்டு திறன்கள் ( Modern Operational Skills) குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக துணிநூல் துறை, கார்ல் மையர் மற்றும் பவர்லூம் டெவலப்மெண்ட் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் (PDEXCIL) ஆகியோருக்கிடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி, மாநகராட்சி மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.