சென்னை, அக்டோபர் 23:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுச் செய்தி வெளிவந்ததையடுத்து, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அருமைச் சகோதரர் கு.பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் பேரவையில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அந்த தொகுதி மக்களுக்கும், திமுகவிற்கும் பேரிழப்பாகும்.
கட்சியின் மீது தீவிரப் பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் – என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்தவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.
அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திமுக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.