சென்னை, ஜனவரி 24:
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன. 20-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், நிகழ்வின் முதலிலேயே தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார். தமிழகத்தில் நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவில் தேசிய கீதமும் இசைப்படுவதுதான் வழக்கம்.
இதைத்தொடர்ந்து 3 நாள்கள் அவை செயல்பட்ட நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலுரை ஆற்றினார். முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக புறக்கணித்து அவையில் பங்கேற்கவில்லை.
அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான் இன்று ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், செய்த சாதனைகளை பட்டியலிட்ட அவர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இறுதியாக தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இதையடுத்து ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.