கரூர், நவம்பர் 05:
தமிழகத்தில் செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் நடத்திய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணையை உத்தரவிட்டது.
அதன்படி, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுச்சாமிபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உள்ளிட்ட 306 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 7 காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் 12 பேர் நேற்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். சுமார் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஆஜரான 7 பேரின் மீண்டும் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது பாதுகாப்புப்பணியில் இருந்த 3 காவல் உதவி ஆய்வாளர்களிடமும் கரூர் சிபிஐ அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.