டெல்லி, டிசம்பர் 29:
கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் இன்று ஆஜராகினர்.
டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் ஆஜராகினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், தவெக நிர்வாகிகள், கரூர் ஆட்சியர், காவல் துறை உயரதிகாரிகள், பலியானவர்களின் குடும்பத்தினா், காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே. ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இதேபோல், தவெக பொதுச்செயலர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலா் சிடிஆர். நிா்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி. மதியழகன் ஆகியோருக்கும் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று ஆஜராகினர்.
கரூா் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேலும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகவுள்ளார்.