சென்னை, ஆகஸ்ட் 07 :
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த தி.மு.க. கழக பிரமுகர்கள் கருணாநிதியின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்த கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மு.க. தமிழரசு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அனைவரும் அமைதி பேரணி சென்றனர். பேரணி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தை அடைந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். இந்த பேரணியில் முதலமைச்சர் ஸ்டாலினோடு, துணை முதலமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள், கழக தலைவர்கள் கலந்து கொண்டனர்.