டெல்லி, டிசம்பர் 25:
கர்நாடகாவில் பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியதாவது, “கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடந்த பேருந்து தீ விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியதாவது, “கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.