டெல்லி, ஜூலை 25:
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் வைகோ, வில்சன், அன்புமணி ராமதாஸ், சண்முகம், என்.சந்திரசேகரன், முகமது அப்துல்லா ஆகியோரின் பதவிக்காலம் நேற்று (24-07-2025) முடிவடைந்தது.
இதையடுத்து, கடந்த ஜூன் 19-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இந்த 6 இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திமுக-வைச் சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேபோல், அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பதவியேற்றார். அவர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை தமிழில் எடுத்துக்கொண்டார். அவருக்கு பின்னர், திமுக-வை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கமும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றனர். அதிமுக-வுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களான இன்பதுரை மற்றும் தனபால் நாடாளுமன்றத்தில் வரும் 28-ந்தேதி பதவியேற்கவுள்ளார்கள்.