சென்னை, ஜனவரி 27:
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று(ஜன. 27) காலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்கிறது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
‘ஜன நாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா,’ஜன நாயகன்’ படத்தை மறு ஆய்வு குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில்,சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ளது.