சென்னை, ஆகஸ்ட் 06:
சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 5.45 மணிக்கு சென்னையின் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஓடுபாதையில் ஓட தொடங்கிய போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இந்த நிலையில் விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 73 பேர் இருந்தனர். இந்த இயந்திரக் கோளாறை விமானி சரியாக கவனித்த உடனே விமானத்தை அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தினார். இதன் பின்னர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து பராமரிப்பு குழுவினர் விரைந்து விமானத்துக்குள் சென்று, சுமார் ஒரு மணி நேரம் பழுது பார்த்து, பயணிகள் விமானத்துக்குள் அமர்ந்திருந்த நிலையில், விமானம் சுமார் ஒரு மணி நேர தாமதத்துடன் மீண்டும் புறப்பட்டு திருச்சிக்கு சென்றது. இவ்வாறு விமானி தகுந்த நேரத்தில் இயந்திரக் கோளாறை கண்டுகொண்டு எடுத்த உடனடி நடவடிக்கையின் மூலம் 73 பயணிகளின் உயிர் தப்பியது.