டெல்லி, டிசம்பர் 04:
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து 2-வது நாளாக 180-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ விமான நிறுவனம் இன்று ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற மூன்று முக்கிய விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படும் 180-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களை இன்று ரத்து செய்யப்பட்டன.
இண்டிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்களும், பெங்களூரில் 73 விமானங்களும், டெல்லி விமான நிலையத்தில் 33 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றைய நாள் இறுதிக்குள் விமான டிக்கெட் புக் செய்து ரத்து செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப சிக்கல்கள், விமான நிலைய நெரிசல் மற்றும் செயல்பாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாள்களில் பல விமானங்கள் தவிர்க்க முடியாத வகையில் தாமதமானது,
விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு போதுமான ஓய்வு நேரத்தை உறுதி செய்யும் வகையில், விமான கடமை நேர வரம்புகள் இரண்டாம் கட்ட விதிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அமல்படுத்தியதில் இருந்து இண்டிகோ நிறுவனம் ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாள்களாகவே இந்த பிரச்னையில் இண்டிகோ நிறுவனம் சிக்கியுள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி முதல் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பல விமானங்கள் ரத்தாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.