பாட்னா, ஆகஸ்ட் 29:
பீகாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்ட நிலையில், 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் , காங்கிரஸ் மூத்த தலைவரும் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பல முன்னணி தலைவர்கள் பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய “வாக்காளர் உரிமை யாத்திரை” கடந்த 16-ஆம் தேதி தொடங்கி, வருகிற 1-ஆம் தேதி பாட்னாவில் முடிவடைய உள்ளது. இதில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், இந்திய கூட்டணி தலைவர்கள் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வருகின்றனர்.
இவ்விடத்தில், ராகுல் காந்தி நடத்தும் பேரணியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக முழக்கமிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்து, இதனால் பாஜகவினர் பாட்னாவின் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது இரு கட்சித் தொண்டர்களுக்கிடையே பரபரப்பான மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர்களும் கட்சி கொடியைப் பிடித்து மாறி மாறி தாக்கியதால் பரபரப்புக்கு இடம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார் மோதலை நிறுத்தி சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த மோதல், பீகாரில் நிலவும் வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள திருத்தங்களை அரசியல் பரபரப்பை அதிகரித்து வருகின்றது.