ராமநாதபுரம், செப்டம்பர் 11:
ராமநாதபுரம் மாவட்டத்தில், சமூகநீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவுநாளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், “முதலமைச்சரின் அறிவுரைப்படி நானும், மூத்த அமைச்சர்களும் இங்கு மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக அர்ப்பணித்த இமானுவேல் சேகரனுக்கு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கி மணிமண்டபம் மற்றும் சிலை பணிகள் விரைவில் முடிக்கப்படவுள்ளன. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன” என்று தெரிவித்தார்.
அப்போது அதிமுக, பாஜகவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக நீங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறீர்களே அதுபற்றி கூறுங்கள் என்ற நிருபர்கள் கேட்டதற்கு, இங்கு அஞ்சலி செலுத்துவதற்காக தான் வந்தேன். அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.