டெல்லி, ஆகஸ்ட் 9:
டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
டெல்லியின் முக்கிய வீதிகளான பஞ்ச்குயன் மார்க், சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோத்தி பாக், கித்வாய் நகர் போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்து பரபரப்பாக காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், டெல்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 92 விமானங்கள் மற்றும் வர வேண்டிய 13 விமானங்கள் தாமதமாகியுள்ளன. விமானங்கள் ரத்து செய்யப்படவில்லை என்றாலும், பயணிகள் விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமான இன்றியமையாத மாற்றங்களை கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்கு விமான விபரங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.