சென்னை, நவம்பர் 28:
டிட்வா புயலால் ஏற்படும் கனமழைக்கு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மாணவர்கள் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்ற டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி மணிக்கு 10-15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. சென்னையிலிருந்து 560 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 460 கி.மீ. தொலைவில் உள்ள இப்புயல் நவம்பர் 30 அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் வட்டப் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்துக்கு நாளை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, சிவகங்கை, திருச்சி, அரியலூருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது .
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியதன் பின், டெல்டாவில் 8 பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மக்கள் ஆற்றங்கரைகள், கடலோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
வானிலை மையம் தெரிவித்தபடி, நவம்பர் 29, 30-ல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிககனமழை வாய்ப்பு.