டெல்லி, ஆகஸ்ட் 28
மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர்களால் நிலுவையில் வைக்கப்படுவது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர்களிடம் மாநில அரசுகள் அனுப்பும்போது, அவற்றின் மீது மூன்று மாதங்களுக்குள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நேரக்கெடு நிர்ணயித்திருந்தது. ஆனால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “நீதித்துறை அல்லது உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்களுக்குச் சுட்டிக்காட்டும் வகையில் உத்தரவிட முடியுமா?” என்று 14 கேள்விகளை எழுப்பி, இவ்விஷயத்தில் தலைமை நீதிபதியின் விளக்கத்தை நாடியிருந்தார்.
இந்த வழக்கின் தொடர்ச்சியான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடந்தது. விசாரணையின் போது பாஜக ஆளும் மாநிலங்களின் சார்பில் வழக்குரைஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். அப்போது நீதிமன்றம்,“மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது எந்தத் தீர்மானமும் எடுக்காமல் ஆளுநர்கள் வைத்திருப்பது நியாயப்படுத்த முடியாதது. குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்விகள் எழுப்புவதில் குற்றமே இல்லை” எனத் தெளிவுபடுத்தியது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியா என்பதில் மத்திய அரசு சந்தேகம் வெளியிட்டது.“ஆளுநர்கள் ஒப்புதல் தரவில்லை என்றால், மாநில அரசுகள் வழக்கு தொடர முடியாது. மசோதாக்கள் மீது ஏன் முடிவு எடுக்கவில்லை என ஆளுநர்களை உச்ச நீதிமன்றம் நேரடியாகக் கேட்டு விட முடியுமா?”* என மத்திய தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள்,“ஆளுநர்களிடம் நீதிமன்றம் கேள்விகள் எழுப்புவதில் எந்த வித தவறும் இல்லை” என்று உறுதியாகக் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் தான் முன்பு விளக்கம் கேட்டிருந்ததால், ஆளுநர்களின் அதிகாரம், மாநில அரசின் உரிமை மற்றும் நீதித்துறையின் மேற்பார்வை ஆகியவற்றை ஒருங்கிணைத்து பரிசீலிக்கும் பணியில் உச்சநீதிமன்றம் தற்போது ஈடுபட்டுள்ளது.