சென்னை, நவம்பர் 25:
தமிழர்களுக்கு எதிராக பேசுவதே தமிழ்நாடு ஆளுநரின் வேலையாகி விட்டதாக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்தவர்கள் அச்சுறுத்தப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியது முற்றிலும் தவறான தகவல். தமிழர்களுக்கெதிராகப் பழிவாங்கும் போக்கில் ஆளுநர் செயல்படுகிறார்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது,“மத்திய அரசு தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கி வருகின்றது. பா.ஜ.க.வின் தலைமையிலான அரசின் கருத்துக்களையே ஆளுநர் பிரதிபலிக்கிறார். அவரின் பேச்சு, செயல்பாடுகளில் அரசியல் நோக்கம் வெளிப்படுகிறது. தேர்தல் நெருங்குகிறது என்பதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயல்கிறார்,” என குறிப்பிட்டார்.
“தி.மு.க. கட்சி இந்திய ஒற்றுமைக்காகச் செயல்படுகிறது. தமிழகமும் பல மாநிலங்களுடன் நல்லுறவை பேணி வருகிறது; பல மாநில முதலமைச்சர்களை நிகழ்ச்சிகளுக்காக இங்கு அழைத்து வருவது அதற்குச் சாட்சியம். எனினும், தமிழ்நாடு தனித்து நிற்பது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க ஆளுநர் முயற்சி செய்கிறார்.
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்றால், சட்டபடி அதற்காக நீதிமன்றத்தை அணுகலாம். மாநிலங்களில் இரண்டு அதிகார மையங்கள் இருக்கக்கூடாது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. எனவே, இந்திய அரசியலமைப்பை மதிக்காமல் மலிவான அரசியல் செய்யும் அவசரம் தமிழ்நாட்டுக்கு இல்லை,” எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், “தமிழகத்தில் மொழிவாரி சிறுபான்மையினருக்கு குறைவான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது” என ஆளுநர் கூறிய கருத்து முற்றிலும் தவறானதாகும். தமிழகத்தில் அனைவரும் சம உரிமையுடன் வாழ்ந்து வருகின்றனர்,” என ரகுபதி வலியுறுத்தினார்.